ரணிலை நீக்காவிடின் வெளியேறுவோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி போர்க்கொடி
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
“அண்மையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்குப் பின்னால் நிழற்க முடியாத நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, சுதந்திரமாகச் செயற்பட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஐதேக அமைச்சர்களுடன் எமக்கு எந்த மனக்கசப்புகளும் கிடையாது. ரணில் விக்கிரசிங்க இல்லாத எந்தவொரு அரசாங்கத்துக்கும் நாம் ஆதரவளிப்போம்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள 41 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 35 பேர் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளனர்.” என்று கூறினார்.