யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்குப் பின்னடைவு – ஒப்புக்கொள்கிறார் சுமந்திரன்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
“ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 56 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டது. இதுவரை வெளியான தகவல்களின்படி, 40 உள்ளூராட்சி சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது மிகப் பெரிய சாதனை.
பல நாடுகளின் தூதுவர்கள் எமக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 7 மாவட்டங்களில், முன்னரை விட சற்று கூடுதலான வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடும் போது, உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளது. இது ஒரு பின்னடைவு.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளில், 13 சபைகளில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றியுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்கள் குறித்து கூட்டமைப்பு விரைவில் ஆராயும், அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.