சிறிலங்கா கடற்படை வாகனம் மோதி மாணவி பலி – புங்குடுதீவில் பதற்றம்
யாழ். தீவகத்தில் உள்ள புங்குடுதீவில், இன்று காலை சிறிலங்கா கடற்படையின் கவச வாகனம் மோதி, பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
தனது மாமனாருடன் குறித்த மாணவி உந்துருளியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது, சிறிலங்கா கடற்படையின் கவசவாகனம் மோதியது.
இதில் 9 வயதுடைய மாணவி, திருலங்கன் கேசனா அந்த இடத்திலேயே மரணமானார். அவரது மாமனார் காயங்களுடன் தப்பினார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடியதால், பதற்ற நிலை ஏற்பட்டது.
புங்குடுதீவில் அடிக்கடி சிறிலங்கா கடற்படை வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால், இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நிலைமைகள் மோசமடைவதை தடுக்க அந்தப் பகுதியில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் விபத்தை ஏற்படுத்திய சிறிலங்கா கடற்படை சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.