வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு உச்சநீதிமன்றினால் தள்ளுபடி
மகரகம நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வேட்புமனுவில் இடம்பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச பெண் வேட்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஒரு பெண் வேட்பாளரை ஆண் என்று குறிப்பிட்டிருந்ததாலும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்புமனுவை தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்திருந்தார்.
இதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சிறிலங்கா பொதுஜன முன்னணி மனுத்தாக்கல் செய்திருந்தது.
தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழு நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதன்போது, இந்த மனு விசாரணைக்குத் தகுதியற்றது என்று நீதியரசர்கள் தீர்மானித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.