தகுதியிழப்புச் செய்யும் அதிகாரம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள், தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களைத் தகுதியிழப்புச் செய்வதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசபணியில் கள அதிகாரிகளாகப் பணியாற்றுபவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் உள்ளது. அதனை மறைத்து, சட்டவிரோதமாக அத்தகைய கள அதிகாரிகள் அல்லது போட்டியிடத் தகுதியற்றவர்கள், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவர்களைத் தகுதியிழப்புச் செய்யும் அதிகாரம் எமக்கு இல்லை.
வெற்றிபெற்ற வேட்பாளர்களை தகுதியிழப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றச் செயல்முறைகளின் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதனைச் செய்வதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை. பதவி விலகி, அரசாங்க சேவையில் இல்லாத கள அதிகாரிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்ட ரீதியான தடைகள் இல்லை.
எனினும், உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றிய அதிகாரிகள், பதவி விலகிய பின்னரும் அவ்வாறு செய்ய முடியாது. அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்.
எனினும், அத்தகைய வேட்பாளர்களின் நியமனப் பத்திரங்களை ரத்துச் செய்யும் அதிகாரம் எமக்கு இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.