மைத்திரிக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது – ஐதேகவினருக்கு ரணில் கட்டளை
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக, இனிமேல் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று, ஐதேக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஐதேக தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று காலை ஐதேகவின் அவசர செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கினார்.
அத்துடன், அரசாங்கத்தின் மற்றொரு பங்காளியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் நேரடியாக அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும், ஐதேக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமர் ஆலோசனை கூறியுள்ளதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர், மரிக்கார், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தவறாக திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அல்லது தவறாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிக்பொக்கட் அதிபர் என்று தாம் கூறவில்லை என்றும், மகிந்த ராஜபக்சவின் சட்டைப்பையில் இருந்தே, மைத்திரிபால சிறிசேனவை பிக்பொக்கட் அடித்தோம என்று தான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.