சிறிலங்கா போன்ற நாடுகளை கடன் பொறிக்குள் தள்ளுகிறது சீனா – அனைத்துலக நாணய நிதியம்
சீனாவின் கடன்கள் சிறிலங்காவைக் கடன் பொறிக்குள் தள்ளி விட்டுள்ளதாக, அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் டேவிட் லிப்டன், ஹொங்கொங்கில் நடந்த மாநாடு ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
“சீனாவின் உதவியைப் பெறும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் எதிர்கால கடன் நெருக்கடிகளுக்கு தளம் அமைத்துக் கொள்கின்றன.
சீனாவின் தற்போதைய கடன் வழங்கும் போக்கு தொடருமானால், சில அபிவிருத்தி அடையும் நாடுகள் பொருத்தமற்ற கடன்சுமைக்குள் தள்ளப்பட நேரிடும்.
சில நாடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25, 30 வீதம் வரை சீனாவிடம் கடன் பெற்றுள்ளன.
சிறிலங்காவுக்கு ஏற்பட்ட நிலை மற்றைய நாடுகளுக்கான முன்னெச்சரிக்கையாகும்.
சீனாவின் கடன்பொறியில் சிக்கிய சிறிலங்கா, சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட சொத்துக்களை அந்த நாட்டுக்கே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் துறைமுகம், விமான நிலையத்தை விற்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஆபிரிக்க நாடுகளை சீனா கடன்பொறிக்குள் தள்ளுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நிராகரித்துள்ளார்.
அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ளார்.