கொமடோர் தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கும் பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க மற்றும் ஐந்து பேரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி காணாமல் போகச் செய்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க மற்றும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியரத்ன, கொமடோர் தசநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களையும், தலா ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று பேரின் பிணை உத்தரவாதத்தின் கீழும் பிணையில் செல்ல அனுமதித்தார்.