சாவகச்சேரி நகர சபையைக் கைப்பற்ற 9 கட்சிகள் போட்டி
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக, யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட- 7 மாநகர சபைகள், 18 நகர சபைகள், 68 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலஎல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரமே இந்த பட்டியலில் உள்ளடங்கியுள்ள நிலையில், இன்று நண்பகலுடன், இங்கு வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, யாழ். மாவட்டச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன், சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த 9 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈபிடிபி, தமிழ் சமூக ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஜேவிபி ஆகிய கட்சிகளே போட்டியில் உள்ளன.