தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிப்பு
அம்பாறை மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கு, வீடு சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழ் அரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் முகவர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமையினாலேயே, இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி, காரைதீவு பிரதேசசபைகளுக்கு தமிழ் அரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.