அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் ரெலோ
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்த ரெலோ, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு கூடிய ரெலோவின் உயர்மட்டக் குழு, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது.
அடுத்தகட்டம் தொடர்பாக நேற்று அறிவிப்பதாகவும் ரெலோ கூறியிருந்தது.
இந்த நிலையில் நேற்றுக்காலை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் ரெலோ பிரமுகர்கள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இதன் பின்னர், ரெலோவின் உயர்மட்டத் தலைவர்கள் நேற்று மாலை கூடிப் பேச்சு நடத்தியிருந்த போதிலும், அடுத்தகட்டம் குறித்த முடிவுகள் எதையும் அறிவிக்கவில்லை.
இன்று காலை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலத்துடன் பேசவுள்ளதாக ரெலோ பொதுச்செயலர் என்.சிறீகாந்தா தெரிவித்தார்.
அதேவேளை, தம்முடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொலைபேசியில் பேசியதாகவும், தற்போதைய சிக்கல்கள் குறித்து பேச்சு நடத்த விருப்பம் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.