ஜேர்மனி, இத்தாலியில் இருந்து நாடுகடத்தப்பட்ட நான்கு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்கவில் கைது
ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து நாடுகடத்தப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நான்கு இளைஞர்களும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளுக்குப் பின்னர் மினுவங்கொட நீதிமன்றத்தில் இவர்கள் நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து நால்வரையும், நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சட்டவிரோத ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்றதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்குப் புறம்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவையும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.