அரியாலையில் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணியம்தோட்டம் சந்தியில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்புத்துறை, உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய டொன் பொஸ்கோ றிச்மன் என்ற இளைஞனே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இவர் மார்பில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில், யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில், இருப்பதாகவும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதற்கான காரணங்கள் இன்னமும் வெளியாகவில்லை. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்திலும், யாழ். போதனா மருத்துவமனையிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் மரணமானதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.