மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமானது – மகிந்த எச்சரிக்கை
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது பாரதூரமான விடயம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை, தங்காலை சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டையும் அதன் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டியது மக்களின் உரிமை.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கும், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கும் குத்தகைக்கு விட தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடு ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை குத்தகைக்கு விடுவது பாரதூரமான விடயம். ஏனெனில் அதனைச் சுற்றியுள்ள வான்பரப்பு முழுவதும், அதன் கட்டுப்பாட்டின் கீழ் சென்று விடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.