சீன எக்சிம் வங்கி அதிகாரிகள் குழு சிறிலங்கா வருகிறது
சிறிலங்காவுக்குப் பெருமளவு கடன்களை வழங்கியுள்ள சீனாவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) யின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளது.
சீன எக்சிம் வங்கியின் சலுகைக்கடன் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் லி டான் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
அடுத்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான மதிப்பீடுகளைச் செய்யவே இந்தக் குழு சிறிலங்கா வரவுள்ளது.
சீனாவின் எக்சிம் வங்கி ஏற்கனவே சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல்மின் நிலையம், மத்தல விமான நிலையம் ஆகிய திட்டங்களுக்கு, சீன எக்சிம் வங்கியே கடன்களை வழங்கியது.
நெடுஞ்சாலைகள், நீர்ப்பாசனம், வடிகாலமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மேலும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா வரவுள்ள சீன எக்சிம் வங்கிக் குழுவுடன், சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.