20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு கிழக்கு, மேல் மாகாணசபைகள் அங்கீகாரம்
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு, கிழக்கு மாகாணசபையும், மேல் மாகாணசபையும் இன்று அங்கீகாரம் அளித்துள்ளன.
மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையில், சிறிலங்கா அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தது.
இந்த வரைவு மாகாணங்களின் உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று இரண்டு மாகாணசபைகள் இதனை நிராகரித்திருந்தன. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணசபைகள், சட்டவரைவில் திருத்தம் செய்த பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென முடிவு செய்தன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச்சட்ட வரைவில், குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்கள் செய்யப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து மீண்டும் மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்காக இந்த வரைவு அனுப்பப்பட்டது.
இன்று கிழக்கு மாகாணசபையில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட போது, 25 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன. 8 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.
அதேவேளை, மேல் மாகாணசபையிலும், இந்த திருத்தச்சட்ட வரைவு இன்று நிறைவேற்றப்பட்டது.
இன்று மேல் மாகாணசபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக 45 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 28 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 5 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.