மத்தல, கொழும்பு துறைமுக திட்டங்களை விரைவுபடுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்
மத்தல விமான நிலைய திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனைய திட்டம் போன்ற இருதரப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு, சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதரப்புத் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த சில வாரங்களாக சிறிலங்காவை இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் புதுடெல்லிப் பயணம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்த போதும், இந்த திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்க கடந்தவாரம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்புகளின் போது, இந்தியா ஆர்வம் காட்டி வரும், மத்தல விமான நிலைய திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனைய திட்டம் போன்றவற்றை விரைவாக இறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், அவர் கோரியதாக, கொழும்பிலுள்ள உயர்மட்ட வட்டாரம் ஒன்று, தி ஹிந்து ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளது.