கூட்டுப் பயிற்சிக்காக சிறிலங்கா போர்க்கப்பல்கள் விசாகப்பட்டினம் விரைவு
இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள், நேற்று விசாகப்பட்டினத்தக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.
SLINEX 2017 என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான, சயுர மற்றும் சாகர ஆகியன நேற்று திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.
இவை நாளை விசாகப்பட்டினம் துறைமுகத்தைச் சென்றடையும். இதையடுத்து, வரும் செப்ரெம்பர் 7ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டப் பயிற்சி இடம்பெறும்.
43 அதிகாரிகள், உள்ளிட்ட 368 சிறிலங்கா கடற்படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்தியா சென்றுள்ளனர்.