தனக்கெதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படாது என்று ஐ.நாவிடம் உறுதிமொழி பெற வேண்டுமாம்
தனக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படாது என்று ஐ.நாவிடம் உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜெனரல் ஜயசூரிய, சிறிலங்காவில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டி பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில், போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரேசிலுக்கான தூதுவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய, ஜெனரல் ஜயசூரிய, இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாளே, அங்கிருந்து வெளியேறி சிறிலங்கா வந்துள்ளார்.
தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள ஜெனரல் ஜயசூரிய,
“மின்சார நாற்காலி இல்லை, அனைத்துலக போர்க்குற்ற விசாரணை இல்லை என்று அறிக்கைகளை வெளியிடுவதற்கு அப்பால், சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகச் செயற்பட வேண்டும்.
எனக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறாது என்று ஐ.நாவிடம் வாக்குறுதியைப் பெற வேண்டும்.
நான் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. போரின் போது, இராணுவப் படைப்பிரிவுகளுக்கு நானே இறுதி உத்தரவுகளை வழங்கியதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது முற்றிலும் தவறானது.” என்றும் அவர் கூறியுள்ளார்.