ஜெனரல் ஜயசூரிய மீதான போர்க்குற்றச்சாட்டு – சிறிலங்கா இராணுவம் நிராகரிப்பு
பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.
கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்ட அவர், இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், “2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததில் இருந்து, சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, விடுதலைப் புலிகளின் கோட்பாடு, சிறிலங்காவில் தோற்கடிக்கப்பட்டாலும், இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.
அதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சாட்சியங்களின் அடிப்படையில், தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வாறாயினும், போரின் போது நடந்த எல்லா கொலைகள் மற்றும் எல்லாமே மனித உரிமைமீறல்கள் அல்ல” என்று குறிப்பிட்டார்.