சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை
ஜெனிவாவில் சிறிலங்கா அளித்துள்ள முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றங்களை காண்பிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முன்னேற்றங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிகாரிகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுக்க வேண்டும்.
குறிப்பாக, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைக்கு அமைய, உண்மை,நீதி மற்றும் இழப்பீட்டு பொறிமுறைகளுக்கான வீதி வரைவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
நீதி, உண்மை, இழப்பீட்டு பொறிமுறைகள் அனைத்துலக தரம் வாய்ந்ததாக இருக்கும் வகையிலும், சட்ட மறுசீரமைப்பு மற்றும் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கான ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் அமைப்புகள், மனித உரிமை சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்கும் இலங்கையர்கள் அனைவருக்கும், பயிற்சி மற்றும் திட்டங்களில் பங்கேற்கும் இராணுவத்தினருக்கும் சமமாக மனித உரிமைகள் ஆய்வு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்காவுக்கு ஐ.நா உதவ வேண்டும்.
அனைத்துலக சட்டம் அல்லது ஏனைய மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்கு பரஸ்பர சட்ட உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.” என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.