சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவர் – சிறிலங்கா கடற்படைத் தளபதி
போரில் எத்தகைய சாதனைகளைச் செய்திருந்தாலும், சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ள கடற்படையினர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
“ மீண்டும் நாட்டில் போர் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று நான் நம்பவில்லை.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்ததால், அவர்களின் அச்சுறுத்தல் எனக்கு இருக்கிறது. போர் முடிவுக்கு வந்திருந்தாலும் அந்த அச்சுறுத்தல் இன்னமும் இருக்கிறது.
கடற்படை நிர்வாகத்திலும், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிப் பயன்பாடு குறித்தும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும்.
சிறிலங்கா கடற்படையை இன்னமும், அதிகமான திறமை மற்றும் தொழிற்திறன் கொண்டதாக மாற்றுவதே எனது இலக்கு. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.