சிராந்தி, யோசித, றோகிதவிடம் இன்றும் நாளையும் விசாரணை- ராஜபக்ச குடும்பம் நெருக்கடியில்
ரக்பி விளையாட்டு வீரர், வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்சவும், அவரது மகன் யோசித ராஜபக்சவும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தாஜூதீன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சிரிலிய சவிய அறக்கட்டளைக்கு சொந்தமான வாகனம் தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூலை 27, 28ஆம் நாள்களில், சிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதிலும், அந்த விசாரணைகளுக்கு அவர்கள் முன்னிலையாகவில்லை.
இந்தநிலையில் இன்று சிராந்தி ராஜபக்சவை இன்றும், யோசித ராஜபக்சவை நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணைக்காக அழைத்துள்ளது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் கடைசி மகனான றோகித ராஜபக்சவுக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
சீனாவுடன் இணைந்து செய்மதி ஒன்றை ஏவியது தொடர்பான மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
பிந்திய செய்தி
சிராந்தி ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்திலும், றோகித ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளனர்.