20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்சநீதிமன்றில் 10 மனுக்கள்
சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்களைத் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
அனைத்து மாகாணசபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான 20ஆவது திருத்தச்சட்ட வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, பவ்ரல் மற்றும் கபே அமைப்புகள் தயாராகி வருகின்றன.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டு, இரண்டு வாரங்களாகியுள்ள நிலையில், எந்த நேரத்திலும் இதனை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும்.
அனைத்து மாகாணசபைத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்தும் வகையிலான இந்த திருத்தச்சட்ட வரைவு அரசியலமைப்புக்கு முரணானது என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்களை தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றன.