ஆவா குழு உறுப்பினர்களை வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை
யாழ்ப்பாணம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரை, ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு, சிறிலங்கா காவல்துறை நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளது.
யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டார்கள் என்றும், ஆவா குழு உறுப்பினர்கள் என்றும் கைது செய்யப்பட்ட பலர், யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை ஒரே சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதால், சூழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆபத்து இருப்பதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் யாழ்ப்பாண சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையிலேயே, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவா குழு சந்தேக நபர்களை, நாட்டின் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு, சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்றங்களிடம் அனுமதி கோரியுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.