சிறிலங்கா- பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்
சிறிலங்காவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
பயிற்சி, கல்வி, பாதுகாப்புத் துறையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளை உள்ளடக்கியதாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவுக்கும், பிலிப்பைன்சின் பிரதி தேசிய பாதுகாப்பு அமைச்சர் கார்டோசோ லூனாவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களில் பிலிப்பைன்சின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
50 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.