மேலும்

ஆவா குழுத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது

Arrestகொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்குத் தலைமை தாங்கியவர் என்று கூறப்படும் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேரை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர,

“ஆவா குழுவின் தலைவராகச் செயற்பட்டவர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் கொழும்பு கோட்டேயிலும், இரண்டு பேர் யாழ்ப்பாணத்திலும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

ஒருவர் கொழும்பு மட்டக்குளியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டேயில் வைத்து, ஆவா குழுவின் தலைவராகச் செயற்பட்டவரான,  நிசா விக்டர் என அழைக்கப்படும், சத்தியவேல் நாதன், வினோத் என அழைக்கப்படும் ராஜ்குமார் ஜெயகுமார், மனோஜ் எனப்படும், குலேந்திரன் மனோஜித், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மட்டக்குளியில் வைத்து, சிவசுப்பிரமணியம் போல் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து, சிறிகாந்தன் குகதாசன், அர்ஜூனன் பிரசன்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவருமே யாழ்ப்பாணம், கொக்குவில், இணுவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களிடம் இருந்து இரண்டு வாள்களும், கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களில் நாதன், கொக்குவிலில் இரண்டு காவல்துறையினர் வெட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராவார்.

இவர்கள் சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் மேற்பார்வையின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *