சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் சத்தியலிங்கம்
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் விலகியுள்ளார். வடக்கு மாகாண அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று தமிழ் அரசுக் கட்சி எடுத்துள்ள முடிவுக்கு அமைய அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றுமாலை அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது-
அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழு தனது இறுதி அறிக்கையில் என்னை விடுவித்திருந்ததுடன், எனது அமைச்சின் செயற்திட்டங்களுக்கு மாகாணசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது.
ஆனால் என் மீது மீள்விசாரணை நடத்தப்படும் என்றும் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் கூறியிருந்தீர்கள்.
மீள அமைக்கப்படும் விசாரணைக்குழு நீதியானதாகவும், சட்டரீதியானதாகவும் இருந்தால் நான் மீண்டும் விசாரணைக்குத் தயாராக இருந்தேன்.
கடந்த 5ஆம் நாள், தங்கள் அலுவலகத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில், அமைச்சரவையிலிருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். அதில் நீங்கள் பிடிவாதமாக இருந்துள்ளீர்கள்.
அமைச்சர் சபையிலிருந்து என்னை வெளியேற்றுவதில் நீங்கள் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாடானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை என்னால் புரியக்கூடியதாக இருந்தது. இவ்வாறான நிலையில் தங்களுடன் இணைந்து தொடர்ந்தும் கடமையாற்றுவது சிந்திக்க வேண்டிய விடயமாக இருந்தது.
இதன் பின்பு, தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் கூடிப் பேசிய போது, மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் இருப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.
இவற்றுக்கு அமைவாகவே எனது பதவி விலகல் கடிதத்தை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் ” என்று கூறப்பட்டுள்ளது.