யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் தேடுதல் – 38 பேர் கைது
யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்று இன்று காலை வரை நடத்திய பரவலான தேடுதல்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நோக்கில், சிறிலங்கா காவல்துறையினரின் உதவியுடன், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழைமை நள்ளிரவில் பரவலான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்று காலை 9 மணிவரை இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாக தெரியவருகிறது. இந்த தேடுதல்களில் நேற்று பிற்பகல் 1 மணிவரை, 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழப்பங்களை விளைவிக்கும் சக்திகளை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் முன்வைத்த பரிந்துரையை அடுத்து, இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கை இதுவாகும்.
வடமராட்சி- துன்னாலைப் பிரதேசத்தில் சனிக்கிழமை அதிகாலை தொடக்கம் சிறப்பு அதிரடிப்படையினர் குறைந்தது ஐந்து தடவைகள் சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
இன்று காலையிலும் துன்னாலைப் பகுதியில் சுற்றி வளைப்புத் தேடுதல்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள சிறப்பு அதிரடிப்படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அதிரடிப்படை கொமாண்டோக்கள், யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய், நெல்லியடி, பருத்தித்துறை காவல் நிலையப் பிரிவுகளில் தேடுதல்களை நடத்தியிருந்தனர்.
இதன் போதே, சந்தேகத்துக்குரிய 38 பேர் கைது செய்யப்பட்டனர். 17 உந்துருளிகள், 7 டிப்பர் பாரஊர்திகள், கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றுமாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை, சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் இணைந்து பாரிய தேடுதல் வேட்டை ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, 18 பேர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் உந்துருளிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களும் சிறிலங்கா காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளன.