ஆளுமைமிக்க இராணுவமாக மாற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் திட்டம்
சிறிலங்காவின் இராணுவக் கட்டமைப்பை மாற்றியமைப்பற்கான திட்டங்கள் சிலவற்றை புதிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முன்வைத்திருக்கிறார்.
கடந்த திங்கள் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், மூத்த அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றிய போது, அவர் இதுதொடர்பாக விளக்கமளித்திருந்தார்.
“சிறிலங்கா இராணுவத்தை’அச்சுறுத்தல்’ மிக்கது என்ற நிலையிலிருந்து ‘ஆளுமை’ மிக்கது என்ற நிலைக்கு மாற்றுவதற்கு அனைவரும் எனக்கு உதவவேண்டும்.
சிறிலங்கா இராணுவ வீரர்களின் தொழில்முறை தரநியமங்களை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்ற வேண்டும்.
‘எல்லோரும் அதிகாரியாகப் பணியாற்ற முடியும். ஆனால் கனவானுக்கு தேவையான பண்புகளைக் கொண்டிருக்க முடியாது. கனவான் என்பது ஒருவரது வெளித்தோற்றத்தை விட அவரது செயற்பாட்டின் மூலமே கணிக்கப்படுகிறது.
சாதகமான மனப்பாங்குகளுடன் கூடிய காத்திரமானதும் நேர்மையானதுமான விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன். அத்துடன் ஒரு பொறுமையான செவிமடுப்பாளராகவும் இருக்க விரும்புகிறேன்.
இப்புதிய யுகத்தில், நாங்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் எமது இலக்குகளை அடைவதற்கு தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் வழங்க வேண்டும்.
எனக்கு இப்பதவியை வழங்கியமைக்காக நாட்டின் அதிபர், பிரதமர் ஆகியோருக்கும் தன்மீது முழு நம்பிக்கை வைத்தமைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு முன்னால் இராணுவத் தளபதிகளாகப் பணியாற்றிய 21 இராணுவத் தளபதிகளுக்கும் அவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளுக்கும் புதிய தலைவணங்குகிறேன்.
மறைந்த ஜெனரல் டெனிஸ் பெரேரா எனது முதலாவது கட்டளைத் தளபதியாவார். அத்துடன் தற்போது பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் ஏனைய தளபதிகளின் அர்ப்பணிப்புக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பின் மூலமே நான் இன்று 22வது இராணுவத் தளபதியாக இங்கு பதவியேற்க முடிந்துள்ளது.
எனக்காகப் பிரார்த்தித்த எனக்காக அழுத மக்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.
போட்டி என்பது மற்றைய நிறுவனங்களைப் போலவே இராணுவத்திலும் இருக்க வேண்டும். இது உண்மை. ஆனால் இந்தப் போட்டியானது நீதியானதாகவும், ஒழுக்கம் சார்ந்ததாகவும், பண்பானதாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் எவரும் தளபதி என்கின்ற நிலையை அடைய முடியும்.
சிறிலங்கா இராணுவமானது எதிர்காலத்தில் ஆளுமை மிக்கதொரு படையாகக் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் தேவையையும், இதன் மூலம் அச்சத்தைத் தரவல்லது என்கின்ற அடிப்படையிலிருந்து இடர் முகாமைத்துவம், தேச நிர்மாணம், மீளிணக்கம் மற்றும் தேசியப் பொறுப்புக்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான முழுமையானதொரு மனிதர்களாக மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அத்துடன் மரபுசார் மற்றும் மரபுசாரா யுத்தம் மற்றும் கிளர்ச்சி போன்றவற்றை முறியடிக்கும் திறனுடன் இவ்வாறான பல்வேறு திறன்களும் இராணுவ வீரர்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஒரு இராணுவ வீரன் நிச்சயமற்ற பல்வேறு சவால்களுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் முகங்கொடுக்க வேண்டும். இவரது நலன்கள், இவரது செல்வாக்கு மற்றும் பொறுப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன்மூலம் இராணுவ வீரர்கள் ஆற்றல்மிக்கவர்களாக கட்டியெழுப்பப்பட முடியும்.
எமது இராணுவக் கட்டமைப்பானது கட்டளை சார்ந்தது. நான் எப்போதும் எனக்கான பணிகளைச் செய்வதற்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளேன். இதேபோன்று நீங்களும் உங்களது பணிகளைச் செய்வதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் உங்களுக்கான பொறுப்புக்களுடனேயே இவ்வாறான பணிகளைச் செய்வதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் உங்களது தொழிலைச் செய்யப் போவதில்லை. நான் உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.
நான் இந்த நிறுவனத்திற்கு தலைமை வகிப்பேன். நீங்கள் பல வகையான கப்பல்களிலிருந்து இங்கு வந்துள்ளீர்கள். தற்போது நாங்கள் அனைவரும் ஒரு படகில் பயணிக்கிறோம். இராணுவம் விரும்புவதற்கேற்ப நான் இந்தப் படகைச் செலுத்துவேன்.
நீங்களும் என்னுடன் இணைந்து இந்தப் படகைச் செலுத்தத் தவறினால், நாங்கள் எமது நோக்கத்தை எட்டுவதில் தவறிழைத்து விடுவோம்.
தவறான நடத்தைகள், மீறல்கள், தவறுகள் போன்றன ஏற்படும் போது நான் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுவேன். ஏனெனில் ஒழுக்கம் என்பது எமது நிறுவனத்தின் பலமாகும். இதனை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பயிற்சி என்பது எனக்கான சிறந்த பொதுநலனாக இருக்கும். நாங்கள் எமக்காக தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணித்து வருகிறோம். ஆகவே எதிர்காலத்தில் இப்பல்கலைக்கழகத்தின் மூலம் நாங்கள் மூத்த கட்டளைத் தளபதிகள், இளநிலை அதிகாரிகள் போன்ற பலருக்குமான புதிய இராணுவப் பாடங்களை அறிமுகப்படுத்த முடியும்.
தேசிய பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் பணியாற்ற வேண்டும். போர் முடிவடைந்து விட்டதால் இது தொடர்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
நாங்கள் தற்போது போருக்குப் பிந்திய காலத்தில் வாழ்கிறோம். மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஏனையோர் எமக்குக் கூறுவதற்கு முன்னர் நாங்கள் எமது சொந்தக் கருத்துக்களை முன்வைத்து அவசியமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
2009 இற்கு முன்னர் பணியாற்றிய மற்றும் அதற்குப் பின்னர் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் என இரண்டு வகையாக நான் பிரித்துப் பார்க்க வேண்டும். இதுவே அவர்களின் நலனைக் கண்காணிப்பதற்கான நீதியான வழியாக இருக்கும்.
சிறிலங்கா இராணுவ வீரர்களில் மூன்றில் ஒரு வீரர்கள் எப்போதும் யுத்தத்திற்கான தயார்ப்படுத்தலிலும், மற்றைய மூன்றில் ஒரு வீரர்கள் தேச நிர்மாணப் பணிகளிலும் இறுதி மூன்றில் ஒரு வீரர்கள் இராணுவ நிர்வாகப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
இராணுவத்தின் நற்பெயரைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்துவதற்கான சிறப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு பரிந்துரைக்கிறேன்.
அதிகாரிகளை விட படைவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் நாபன் நினைக்கிறேன். ஏனென்றால் அதிகாரிகளை இலகுவாக நிர்வகிக்க முடியும்.
நாங்கள் எதிர்காலத்தில் கோப்ரல்களின் போருக்குச் செல்கிறோம், ஜெனரல்களின் போருக்கு அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் குறிப்பிட்டார்.