மோடி, சுஸ்மாவுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் முக்கிய பேச்சு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றிரவு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்றுமாலை புதுடெல்லி சென்றடைந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், முதலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினார்.
அண்மைய அனர்த்தங்களினால் சிறிலங்காவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு இந்தியப் பிரதமர் வருத்தம் தெரிவித்ததுடன், இது தொடர்பாக சிறிலங்காவுக்கு மேலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தின் போது, இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இந்தியப் பிரதமரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நன்றியை பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா தயாராக இருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இதையடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சுக்களை நடத்தினார்.
இதன்போது இருதரப்பு உறவுகள் தொடர்பாக பல முக்கியமான விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டதாக புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், இந்தப் பேச்சுக்களின் முக்கியத்துவம் பெற்றிருந்த விடயங்கள் குறித்து இன்னமும் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்றும் புதுடெல்லியில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.