சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை விற்ற மோசடி- முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு முன்னிலையாகும் படி, பாரிய ஊழல்கள், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990ஆம் ஆண்டு தொடக்கம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த இந்த தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்து, ஏ-9 வீதி திறக்கப்பட்ட பின்னர் பழைய இரும்புக்காக கொண்டு செல்லப்பட்டன.
இந்த இயந்திரங்களை பழைய இரும்புக்காக விற்பனை செய்து, மில்லியன் கணக்கான ரூபாவை மோசடி செய்ததாக உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பான விசாரணைகளுக்கே, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் பலரையும் விசாரணைக்கு அழைக்கவும் அதிபர் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.