சிறிலங்காவில் பலியானோர் தொகை 164 பேராக அதிகரித்தது – மோரா சூறாவளியும் மிரட்டுகிறது
சிறிலங்காவில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் மேலும் சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம், சூறாவளியாக மாறியுள்ளது. இதற்கு மோரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
மோரா சூறாவளி வடக்கே பங்களாதேஷ் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிறிலங்காவுக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாவிடினும், இந்த சூறாவளியினால் சிறிலங்காவின் மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளில் கடும் மழையுடன் கடும் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 மி.மீ இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் நிலைமைகள் மோசமடையக் கூடும் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.