சிறிலங்காவுக்கு 2.2 மில்லியன் டொலர் உதவிப் பொருட்களுடன் விமானத்தை அனுப்புகிறது சீனா
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
கூடாரங்கள், போர்வைகள், விரிப்புகள், மழைக் காலணிகள், உயிர்காப்பு அங்கிகளைக் கொண்ட இந்த உதவிப் பொருட்கள் வாடகை விமானம் மூலம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை, சீனா செஞ்சிலுவைக் குழு, ஒரு இலட்சம் டொலரை, சிறிலங்கா செஞ்சிலுவைக் குழுவிடம் நிவாரணப் பணிகளுக்காக வழங்கியுள்ளது.
இதற்கிடையே இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, சீன அதிபர் ஷி ஜின்பிங் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சீனப் பிரதமர் லி கெகியாங், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
அதேவேளை சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு நேற்று அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில், சிறிலங்கா அரசாங்கத்தின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு எல்லா வகையிலும் உதவ சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.