சிறிலங்கா அனர்த்தத்தில் பலியானோர் தொகை 146 ஆகியது – 112 பேரைக் காணவில்லை
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)
சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 112 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 52 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 442,299 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பற்ற பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் களனி கங்கை உள்ளிட்ட பிரதான ஆறுகளின் அருகே உள்ள மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே மீட்புக் குழுக்கள் தரை மற்றும் கடல் வழியாகச் செல்ல முடியாத இடங்களுக்கு இன்று விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக படகுகள் விமானப்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.