வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படை அளித்த கௌரவம்
எழிமலவில் உள்ள இந்தியக் கடற்படை அகடமியில் 338 கடற்படையினர் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.
நேற்று இந்த நிகழ்வு எழிமலவில் உள்ள இந்திய கடற்படை அகடமியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி, பயிற்சியை முடித்த கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர், பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கான சின்னங்களையும் சூட்டினார்.
இந்தியக் கடற்படை அகடமியில் பயிற்சி முடித்து வெளியேறும் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில், வெளிநாட்டு கடற்படை தளபதி ஒருவர் அதிதியாகப் பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள உயர்ந்த பட்ச பாதுகாப்பு ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக இந்திய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இந்தியாவிலேயே சப் லெப்டினன்ட் தொழிற்நுட்பப் பயிற்சியையும், நீர்மூழ்கி எதிர்ப்பு சிறப்புப் பயிற்சியையும், புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு கல்லூரி கற்கைநெறியையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.