வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு – 97 பேரைக் காணவில்லை
சிறிலங்காவின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)
சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், இந்த அனர்த்தங்களின் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்திருப்பதாகவும், 97 பேர் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தங்களில் 49 பேர் காயமடைந்துள்ளனர். 105,956 குடும்பங்களைச் சேர்ந்த 493,455 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் 186 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளமாக இது கணிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 2003ஆம் ஆண்டு மே 17ஆம் நாள் ஏற்பட்ட வெள்ளத்தில் 236 பேர் பலியாகியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் 15 பற்றாலியன்களைச் சேர்ந்த 1500 படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படை 86 படகுகளுடன், 500 பேர் கொண்ட சிறப்புப் பயிற்சி பெற்ற 86 மீட்புக் குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
விமானப்படை ஆறு உலங்குவானூர்திகள் மற்றும் ஒரு கண்காணிப்பு விமானம் என்பனவற்றை மீட்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு சுற்றறிக்கைகள், விதிமுறைகளைப் பாராமல் உதவிகளை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு திரும்பிய அவர், களுத்துறைக்குச் சென்று அங்கு அவசர உதவிகளை வழங்குவது தொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது, உதவிப்பணிகளுக்குத் தேவைப்படும் நிதியை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.