அமைதியைச் சீர்குலைக்க முனைவோர் மீது கடும் நடவடிக்கை – சிறிலங்கா அதிபர் உத்தரவு
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர், அவர் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று அவுஸ்ரேலியா சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கான்பெராவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், ஒரு குழுவினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாடுகளை அரசியல் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன்.
சிறிலங்காவில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் வகையிலேயே 19 வது அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.