கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் சுமேதா போர்க்கப்பல்
இந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூன்று நாள்கள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை மரபுகளுக்கமைய இந்தியக் கடற்படைக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.
இந்தியக் கடற்படைக் கப்பலான சுமேதா கொழும்பில் தரித்து நிற்கும் போது, அதிலுள்ள இந்தியக் கடற்படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, கூட்டுப் பயிற்சி, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு துறைமுகப் பயணங்களை மேற்கொண்ட 20 ஆவது வெளிநாட்டுக் கடற்படைக் கப்பல் இதுவாகும்.
கடந்த 2016ஆம் ஆண்டில் 57 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.