அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் மீண்டும் திருத்தம் – குத்தகைக் காலம் குறைப்பு
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட பேச்சுக்களின் பின்னர், அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டின் வரைவு சிறிலங்கா துறைமுக அதிகார சபையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, துறைமுகத்தின் குத்தகைக்காலம் 99 ஆண்டுகளில் இருந்து 70 ஆண்டுகளாகக் குறைக்கப்படக் கூடும்.
அத்துடன் ஏற்கனவே இணங்கிக் கொள்ளப்பட்ட பங்கு விகிதமான 80:20 இற்குப் பதிலான, 60:40 என்று திருத்தம் செய்யப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, சீன நிறுவனத்துக்கு 60 வீத பங்குகளும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு 40 வீதமும் பங்குகள் கிடைக்கும்.
எனினும், தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக தயாரிக்கப்பட்ட வரைவு உடன்பாடு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட பின்னர், இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதனிடையே இந்த உடன்பாட்டு வரைவு குறித்த கருத்துக்களை தமக்கு வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று துறைமுக அதிகார சபைக்கு, சிறப்பு திட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அறிவுறுத்தியுள்ளார்.
வரும் 9ஆம் நாள் அமைச்சரவையில் இந்த உடன்பாட்டு வைரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.