கொழும்பு, காங்கேசன்துறை, திருமலை துறைமுகங்களில் இந்தியா முதலிடலாம் – அர்ஜூன ரணதுங்க
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில். சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களையே இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்று இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியா முதலீடு செய்து சிறிலங்கா துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அதனை இயக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் இந்தியா ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு துறைமுகம் வழியாக 75 வீதமான கொள்கலன்கள் இந்தியாவுக்கே செல்கின்றன.
கொழும்பு துறைமுகத்தில் பங்காளராக இணைய இந்தியா எதிர்பார்க்கிறது. பல தனியார் நிறுவனங்கள் இது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளன. அதனை சாதகமாக பார்க்கிறோம்.
உலகின் ஐந்தாவது மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம் மீதும் இந்தியா மிகவும் ஆர்வம் கொண்டுள்ளது. திருகோணமலை துறைமுக நகர அபிவிருத்தி தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனமான சுபர்ணா ஜுரோங் சாத்திய ஆய்வு ஒன்றை செய்து கொண்டிருக்கிறது.
இந்தியன் ஓயில் நிறுவனத்தினால் பல ஆண்டுகளாக இயக்கப்படும் பெற்றோலிய குதங்கள் இருப்பதால், திருகோணமலை மீது இந்தியா பெரிய ஆர்வம் கொண்டுள்ளது.
சாத்திய ஆய்வு அறிக்கை மூன்று மாதங்களில் கிடைத்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கும். கேள்விப் பத்திரங்கள் கோருவதை அரசாங்கம் முடிவு செய்யும்.
சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மிகவும் வசதியானதாக உள்ளது என்ற நினைக்கிறேன். கொழும்பு துறைமுகத்தில் சீன மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ஒரு கொள்கலன் முனையம் இருக்கிறது. அதனுடன் அம்பாந்தோட்டை அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதிலும் சிறிலங்கா அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது. அது இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. அது கொள்கலன் துறைமுகம் அல்ல. சீமெந்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு அதனைப் பயன்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.