போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்காது – என்கிறார் கோத்தா
போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்காது என்றும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியேயே அதிகப்படுத்தும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தின் ஊடகவியலாளர்களை நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘விசாரணைகளையும், வெளிநாட்டு நீதிபதிகளையும் ஒரே நேரத்தில் கொண்ட வருவதன் மூலம், இந்த சமூகங்களை இணைக்க முடியும் என்று எவ்வாறு கூற முடியும்?
அவ்வாறு செய்ய நினைத்தால், அனைவருக்குமான நல்லிணக்கம் இருக்காது.
போருக்குப் பின்னர், எம்மால் என்ன செய்ய முடியும்? பின்னால் சென்று, இந்த விடயங்கள் பற்றிப் பேசினால், சமூகங்கள் ஒன்றுபடாது. அது இடைவெளியைத் தான் அதிகப்படுத்தும்.
தமிழர்கள் போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசும் போது, பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள், பௌத்த மதகுருமார் மற்றும் காவல்துறையினரின் படுகொலைகள், போரின் போது தாம் எதிர்கொண்ட கொடூரங்கள் பற்றி பேசுவார்கள்.
அது போருக்குப் பிந்திய குணமாக்கல் செயற்பாடுகளின் வேகத்தைக் குறைக்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.