ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழு சிறிலங்கா வருகிறது
உலகின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்டக் குழுவொன்று இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தெற்காசியப் பிரிவுக்கான உதவித் தலைவர் அன்ட்ரூ மக் டோவல் தலைமையிலான உயர்மட்டக் குழுவே கொழும்பு வரவுள்ளது.
இந்தக் குழுவினர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூத்த அமைச்சர்கள், வர்த்தக பிரமுகர்கள், இராஜதந்திர சமூகத்தினர், உள்நாட்டு, வெளிநாட்டு நிதி அமைப்புகள் ஆகியவற்றைச் சந்தித்து, இப்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால முதலீடுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உதவித் தலைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
2002ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய முதலீட்டு வங்கி சிறிலங்காவில் முதலீடுகளுக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.