சிறிலங்கா- அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் மீண்டும் கூட்டுப் பயிற்சி
சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘மரைன்’ பற்றாலியனுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கே அமெரிக்க கடற்படையின் ‘மரைன்’ படைப்பிரிவினருடன், ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ என்ற தரையிறக்க கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குச் சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ என்ற தரையிறக்க கப்பல் நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
இதில் வந்துள்ள 11 ‘மரைன்’ விரைவுப் படைப்பிரிவைச் சேர்ந்த 375 ‘மரைன்’ படையினர் மற்றும் மாலுமிகள், சிறிலங்கா கடற்படையின் 175 ‘மரைன்’ படையினர் மற்றும் மாலுமிகளுடன் இணைந்து, கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின் போது, வெற்றிகரமான நகர்வு மற்றும் விநியோக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தே இந்தக் கூட்டுப் பயிற்சியில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
சிறிலங்கா கடற்படையுடன் 11 ‘மரைன்’ விரைவுப் படைப்பிரிவு மேற்கொள்ளும்- இராணுவங்களுக்கு இடையிலான இரண்டாவது பயிற்சி பரிமாற்ற நடவடிக்கை இதுவாகும்.
ஏற்கனவே ‘யுஎஸ்எஸ் சோமசெற்’ என்ற 11 ‘மரைன்’ விரைவுப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்று சிறிலங்கா கடற்படையின் ‘மரைன்’ கொமாண்டோக்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது.
அதேவேளை, ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளது. சேத கட்டுப்பாட்டு முறைமைகள் குறித்து சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கப்பலில் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அமெரிக்க கடற்படையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.