மேலும்

ரஷ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர் – நாளை மறுநாள் புடினுடன் சந்திப்பு

Maithripala_Sirisenaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய அதிபரின் அழைப்பின் பேரில், நாளை ரஷ்யா செல்லும் சிறிலங்கா அதிபர், வரும் மார்ச் 24ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார்.

1974ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்கா அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரபூர்வ பயணம், இதுவாகும்.

கடைசியாக, சிறிமாவோ பண்டாரநாயக்க, பிரதமர் பதவியில் இருந்த போது, மொஸ்கோவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகின்ற நிலையில் சிறிலங்கா அதிபரின் ரஷ்யப் பயணம் இடம்பெறவுள்ளது.

ரஷ்யா செல்லும் சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, நாளை மறுநாள் (மார்ச் 23) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதன் போது நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் வர்த்தக மற்றும் முதலீடுகளை மேலும் ஊக்கவிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் இந்தப் பயணத்தின் போது,  மீன்பிடி, சுற்றுலா, கலாசாரம், கல்வி ஒத்துழைப்பு, விஞ்ஞான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐந்து அமைச்சர்களும் ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *