விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா கடற்படை குற்றச்சாட்டு
கச்சதீவு அருகே தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்திய முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 6ஆம் நாள், கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எனினும் சிறிலங்கா கடற்படை இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதுடன், இதுகுறித்து முழு அளவிலான விசாரணையை நடத்துவதாக உறுதியளித்திருந்தது.
இரண்டு வாரங்களுக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறிலங்கா கடற்படைக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமிந்த வலகுலுகே, விசாரணைக்குத் தேவையான புவிநிலைகாட்டி தொழில்நுட்பத் தரவுகளை ( ஜிபிஎஸ்) வழங்குமாறு இந்தியாவிடம் கோரப்பட்டது.
எனினும் இந்தியா இந்த தரவுகள் இதுவரையில் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கவில்லை. இதனால் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தகவல்களுக்காக காத்திராமல் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இந்த வாரத்தில் கையளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.