தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்ற நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர்
சபாநாயகரின் உத்தரவை மீறிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்றுவதற்காக சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு இன்று காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் தனித்தரப்பாக ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, கூட்டு எதிரணியினர் நாடாளுமன்றத்தில் இன்று குழப்பம் விளைவித்தனர்.
இதையடுத்து, கூட்டு எதிரணியின் உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை சபையை விட்டு வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து குழப்பம் விளைவித்த, தினேஸ் குணவர்த்தனைவை வெளியேறுமாறு மீண்டும் சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதையும் மீறி கூச்சல் குழப்பம் செய்த தினேஸ் குணவர்த்தனவை வெளியேற்ற காவல்துறையினரை சபாநாயகர் அழைத்தார். எனினும், சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து வாக்கெடுப்பை நடத்தினால் தாம் வெளியேறத் தயார் என்று தினேஸ் குணவர்த்தன கூறினார்.
இதையடுத்து, சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, சபை நடவடிக்கைளில் குழப்பம் விளைவித்த தினேஸ் குணவர்த்தனவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க ஒருவார கால தடை விதிக்கும் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களும், எதிராக 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து தினேஸ் குணவர்த்தன சபையை விட்டு வெளியேறினார்.