அம்பாந்தோட்டையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்
அம்பாந்தோட்டையில் போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையினர், ஜப்பான், அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்கா கடற்படை மற்றும் சிவில் அதிகாரிகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளை பீடத்தின் 7 ஆவது கப்பற்படைப் பிரிவைச் சேர்ந்த போல் ரிவர் என்ற அதிவேக போக்குவரத்துக் கப்பல் கடந்த மார்ச் 6ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து.
இந்தக் கப்பலில், அமெரிக்க, ஜப்பானிய, அவுஸ்ரேலிய கடற்படை அதிகாரிகள், சிவில் அதிகாரிகளும் வந்துள்ளனர்.
பசுபிக் ஒத்துழைப்பு 2017 கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவே அமெரிக்க கப்பல் அம்பாந்தோட்டை வந்துள்ளது.
அனர்த்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுதல், உதவிப் பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பான கூட்டுப் பயிற்சிகளே அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படுகிறது.
அமெரிக்க கப்பலில் வந்துள்ள கடற்படையினர் மற்றும் சிவில் அதிகாரிகள் அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலைகளைப் புனரமைப்பது, மருத்துவ முகாம்களை நடத்துவது மற்றும் பழுதான கட்டடங்களை சீரமைப்பது போன்ற சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவசர சூழ்நிலைகளின் போது எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படுவது என்பது தொடர்பான பயிற்சியாகவே இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்க கடற்படையின் 73 ஆவது அதிரடிப்படையணியின் தளபதியான றியர் அட்மிரல் டொன் கப்ரியேல்சன், இந்தப் பயணம் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கானது என்றும், பாதுகாப்பில் கவனம் செலுத்தியதோ, அழிக்கும் நோக்கம் கொண்டதோ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பசுபிக் ஒத்துழைப்பு திட்டம், அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.