வடக்கு, கிழக்கில் தனது திட்டங்களுக்கு கூட்டமைப்பை ஒத்துழைக்கக் கோருகிறது இந்தியா
வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ். ஜெய்சங்கர் கோரியுள்ளார்.
நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இந்திய வெளிவிவகாரச் செயலரிடம், தெற்கில் இருந்து வரும் நிறுவனங்கள் அங்கிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவதால் வடக்கில் வேலையின்மை நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கு அவர், வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை .முன்னெடுப்பதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. அங்கு இந்திய முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கிறோம்.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.’ என்று கோரிக்கை விடுத்தார்.
சம்பூர் அனல்மின் திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டதை மனதில் கொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.