சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சாவோ, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றிரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா பிரதமருடன் அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் அதிகாரிகளும், சீன உதவி அமைச்சருடன், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
முன்னதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும், சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சாவோ, சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.